Sunday, July 30, 2017

நானும் அவளும்

அலுவலகத்தில் எனக்கு நல்ல பெயர்.  “ராம் மாதிரி உழைப்பாளி கிடைப்பது கஷ்டம்என்று சொல்லிச்சொல்லியே வேலையை தலையில் கட்டுவார்கள்.  பெண் ஊழியர்களிடம் வேலை தவிர பேச்சு வைத்துக்கொள்வதில்லை.  மனைவிமேல் உள்ள காதலினால் அல்ல. என்மேல் இல்லாத நம்பிக்கையினால்.  திருமணம் ஆகும்வரை பல பெண்களை காதலித்திருக்கிறேன்,  அவர்களுக்கு தெரியாமல். திருமணத்திற்கு பின் வாலை சுருட்டி கொண்டு இருக்கிறேன்.
ஆனால் கௌசல்யா விஷயமே வேறு. என் டீமில்தான் இருந்தாள். சிரித்துக்கொண்டே இருப்பாள், சிரிக்கவைத்துக்கொண்டே இருப்பாள். அதனால்தான் அன்று சிவந்த கண்களோடு அவளை பார்த்ததும் என்னை அறியாமல் கேட்டு விட்டேன்என்ன ஆச்சு? எனி ப்ராப்ளம்?”.
அவளும் கணவரோடு ஏதோ சண்டை என்று கூறி அழுதாள்.
வீட்டிற்க்கு செல்லும் வழியில் ஒரு மெசேஜ் அனுப்பினேன்உங்களிடம் விசேஷமே சிரிப்புதான், அதை விடாதீர்கள்
உடனே பதில் வந்ததுதேங்க்ஸ். உங்கள் மனைவி லக்கி இப்படி காது கொடுத்து கேட்கும் கணவன் வாய்த்ததுக்கு.”
ஏனோ ஜிவ்வென்று இருந்தது. தப்பு செய்கிறேனோ என்று ஒரு குரல் கேட்டது. அதை அடக்கிக்கொண்டு, “உங்கள் கணவரும்தான்என்று பதில் எழுதினேன்.
வீட்டை அடைந்தும் அரட்டை தொடர்ந்தது. என்ன பேசினோம் என்று நினைவில்லை. ஆனால் அடுத்த நாள் எப்போது விடியும்  அவளை எப்போது பார்ப்போம் என்று காத்திருந்தது மட்டும் சத்தியம்.
மற்றவர் எதிரில் நடந்து கொள்ள இருவரும் பழகிக்கொண்டோம். வாட்ஸாப் கண்டுபிடித்தவனை வாழ்த்தாத நாள் இல்லை. இது ஒரு நல்ல நட்பு மட்டும்தான் என்று நான் எனக்கே நினைவுப்படுத்திக்கொண்டே இருந்தேன்.
ஒரு நாள் லன்ச் போலாம்என்று அவள்தான் சொன்னாள்.
நானே நெனச்சேன். நீ எப்படி எடுத்துப்பியோனுதான்
ஒரு முகூர்த்தநாளாக பார்த்து அலுவலகத்திலிருந்து தள்ளி இருக்கும் ஒரு உணவு விடுதிக்கு சென்றோம்.
அருகருகில் அமர்ந்துக்கொண்டோம். விரல்கள் கொஞ்சம் உரசிக்கொண்டது தற்ச்செயலாக மட்டுமே என்று சொல்ல முடியவில்லை. கல்லூரி வயது இளைஞர்கள் போல் அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டிருந்தது எனக்கே வேடிக்கையாக இருந்தது.
தொலைபேசி அடித்தது. கட் செய்தேன். இன்னும் நான்கு முறை அப்படியே நடந்ததும் கௌஸல்யா கவனித்தாள். “யாரு ஃபோன்? ஆன்சர் பண்ணேன்’.
என் வைஃப்தான்
என் ஹஸ்பண்டும் இப்படித்தான். கால் பண்ணா கட் பண்ணுவார்”.
அதற்க்கு பிறகு என்னவென்று தெரியவில்லை. ஆனால் எங்களுக்கு பேச விஷயங்கள் குறைந்துபோனது.

மது

“நாளை மறுநாளுக்கு இந்தியா செல்ல எனக்கும் குழந்தைகளுக்கும் டிக்கெட் புக் பண்ணிட்டேன்” என்று வாட்ஸாப்பில் செய்தி அனுப்பி ஐந்து வினாடிகளில் பதில் வந்தது. “வாட் நான்ஸென்ஸ். இப்பொழுதே கான்ஸல் பண்ணு. மாலை டிஸ்கஸ் பண்ணலாம்”.
“பேசி ப்ரயோஜனம் இல்லை. நாம் வாழ்வது நாடகம். நடித்து சலித்து விட்டது எனக்கும் உனக்கும். போதும். நீ உனக்கு ஏற்றார்ப்போல் ஒரு பெண் - நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி, உன்னுடன் ஒயின் அருந்தி, வேலைக்கு சென்று நிறைய சம்பாதித்துக்கொண்டு வந்து, தினம் ஜிம்மிற்க்கு சென்று உடலை நீ சொல்லும் அளவுக்கு வைத்துக்கொண்டு, வீட்டு வேலைகளை சிரித்துக்கொண்டே செய்துக்கொண்டு, குழந்தைகளை படிக்க வைத்து, காலையில் செய்தித்தாள் படித்துவிட்டு, மாலை நீ அலுவலகத்தில் இருந்து வந்ததும் உனக்கு பிடித்த சமையலை குக்கர் சத்தம் வராமல், மணம் வெளியே தெரியாமல் செய்து, பரிமாறும்போது நாட்டு நடப்பை பற்றி உன் அபிப்பிராயங்களை கேட்டு, புரிந்த்து போல் தலையாட்டி, அவளை பற்றியும், அவள் குடும்பத்தைப்பற்றியும் நீ நகைச்சுவை என்ற பெயரால் சிறுமைப்படுத்துவதை பொறுத்துக்கொண்டு, என்ன சொன்னாலும் நீ அழைக்கும்போது உன்னுடன் படுக்கக்கூடிய ஒரு மாடர்ன் பெண்ணை திருமணம் செய்துக்கொள்.”
பதில் தாமதமாகத்தான் வந்தது – “உன்னை திருத்த முடியாது”.
குழந்தைகளிடம் மெதுவாக விஷயத்தை சொன்னேன்.
“மது, ஆதி, நாம சென்னைக்கு போறொம், பாட்டி தாத்தா வீட்டுக்கு”.
ஐந்து வயது ஆதிக்கு குஷி. “அங்க தினம் லட்டு சாப்பிடலாம். நான் பீம் மாதிரி ஸ்ட்ராங்க் ஆயிடுவேன்.”
மதுவிற்க்கு எட்டு வயது. தானுண்டு தன் புத்தகம் உண்டென்று இருக்கும். அப்பாவுடன் சண்டை போடாவிட்டாலும, சமயங்களில் என்னை வந்து அணைத்துக்கொண்டு “நீ ரொம்ப நல்ல அம்மா. ஐ லவ் யூ மா” என்று சொல்லும்போது, அவளுக்கு எல்லாம் புரிகிறதோ என்று தோன்றும்.
“இப்போ லீவ் இல்லயே. எதுக்கு போகணும்? எப்போ திரும்பி வருவோம்? அப்பா தனியா இருப்பாரே?”
“திரும்பி வர மாட்டோம்டா கண்ணு. அப்பாக்கு என்னை பிடிக்கலே. நான் செத்தா நிம்மதின்னு நேத்து சொன்னார்.”
“நீ வேணும்னா போமா. நான் அப்பா கூட இருக்கேன்.”
“உன்னை யார்டா பாத்துப்பாங்க?”
“வேலைக்கு ஆள் வெப்பார் அப்பா”
“ஸாரி மது. நீயும் எங்கூடதான் வரே”.
அன்றும் வழக்கம்போல பின்னிரவில் வந்திருக்கிறான் போலும். நான் அதிகாலை எழுந்த்ததும் பின்னாலே தானும் வந்தான்.
 “இந்தக்கடிதம் பார்த்தாயா?”
மது கையெழுத்துப்போல் இருந்தது.
“அப்பா நீயும் அம்மாவும் ஏன் சண்டை போடறீங்க?
நாம ஹாப்பி ஃபேமிலியா இருக்கலாம்.
நீ அம்மாகிட்ட அன்பா பேசு’.
எனக்கு கண்ணீர் வந்த்து.
மது எழுந்து வந்து எங்கள் இருவரையும் மாற்றி-மாற்றி பார்த்தது. அவன் என் தோள்மேல் கை போட்டு “மது, இனிமே நாங்கள் சண்டையே போட மாட்டோம். பிராமிஸ்.”
அன்று முழுவதும் இருவரும் ரொம்ப ஜாக்கிரதையாக இருந்தோம். நான் டிக்கெட் கான்சல் செய்து விட்டேன். ரெண்டு நாட்களில் நிலைமை கொஞ்சம் சரியானாற்ப்போல் இருந்தது. ஆனாலும் உள்ளே ஒரு நெருடல்.
“மது, அன்னிக்கு நீ ஏன் அப்பா கூடவே இருக்கேன்னு சொன்னே? அப்பாதான் உனக்கு இன்னும் பிடிக்குமா?”

“இல்லமா. வெட்னெஸ்டே அன்னிக்கு ஸ்கூல்ல டான்ஸ் போட்டி இருக்கில்ல? சென்னை போனா அது மிஸ் ஆயிடுமே. அதான்” என்றாள்.

பாட்டு வாத்தியார்

Written for a short story contest. Already published earlier in English as 'The Music Teacher'

வந்தவருக்கு சுமார் நாற்பது வயது இருக்கும். வியர்த்து போயிருந்தது. நெற்றியில் கும்குமம் இசையமைப்பாளர் சங்கர் ணேஷில் ஒருவரை நினைவுப்படுத்தியது. சிறிய தொப்பை, முகத்தில் ஒரு அசட்டு சிரிப்பு. நிச்சயமாக பாடத்தெரிந்தவர் போல் இல்லை.
"காலைல பாட்டு, கிடார் சொல்லி குடுக்க ஆள் வேணும்னு போன் செய்தது?"
"நான்தான். உள்ள வாங்க".
சோபாவில் காலை பரத்தி அமர்ந்தார்.
"யாருக்கு பாட்டு?"
"எனக்குத்தான் சார்" என்றேன்.
"கிடார்?"
"என் தம்பிக்கு"
சிறிது நேரம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தோம். தனக்கு 'கிஸோர் குமார்' பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றார். என்னை பார்த்து திரும்பி "உங்களுக்கு யிந்தி தெரியுமா" என்றார். சிரிப்பை அடக்கிக்கொண்டு கொஞ்சம் தெரியும் என்றேன்.
"கிடார் கத்துக்கொடுக்க வேற யாராவது வருவாங்களா?"
"இல்ல மேடம் நான்தான் பாட்டு, கிடார், ட்ரம்ஸ், பியானோ எல்லாம் சொல்லி குடுப்பேன்", எனக்கு ஏனோ 'சிங்காரவேலன்' கமல் நினைப்பு வந்தது.
என் தம்பியுடன் உள்ளறைக்கு சென்றார். சிறிது நேரத்தில் உள்ளிருந்து 'டொய்ய் டொய்ய்' என்று சத்தம் கேட்க ஆரம்பித்தது.
வெளியில் வந்து என்னை பார்த்துஅப்போ ஆரம்பிக்கலாமா என்றார்
அதற்க்குள் நான் துணைக்கு அம்மாவையும் பக்கத்து வீட்டில் வசித்த அக்காவையும் சேர்த்திருந்தேன்.
ஸார் சுருதிப்பெட்டி?”
அடுத்தமுறை பாத்துக்கலாம். --ச பாடுங்க
உடனே நான் பாட, “ஆஹா சுருதி பெட்டி மாதிரியே இருக்குஎன்றார். என் கச்சேரி கனவுகள் கொஞ்சம் மங்கினாற்ப்போல் தோன்றியது. வாத்தியாரோ விவேகானந்தரை கண்ட பரமஹம்சரைப்போல் பரவசத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.
ஜண்ட வரிசை சரளி வரிசை பாடலாமா?” என்றதும், நாங்கள் கோரசாக பாட, அவர் உற்சாகம் தாங்காமல் வெறியோடு தொடையில் அப்பளம் தட்டி கொண்டே அமர்ந்த இடத்தில் ஆட, ஒரே கோலாகலம்.
இன்னும் அவர் பாடி கேட்கவில்லையென்று, நான்சார், ஒரு சின்ன பாட்டு சொல்லிக்குடுங்கஎன்றேன்.
எல்லாமே பெரிய பாட்டுதான் தெரியும். அதான் யோசிக்கறேன்.” என்றார்.
நான் விடுவதாக இல்லை. “ஒரே ஒரு பாட்டு”.
சரி. சிம்ப்பிளா ஒண்ணு சொல்லி தரேன்”.
அதற்க்குபின் அவர் போட்ட சத்தத்தை இசை என்று சொன்னால், கலைவாணி வீணையால் என் மண்டையிலே போடுவாள்,
அம்மாவுக்கு குசும்பு ஜாஸ்தி. வேண்டாம் என்று சொல்லி அனுப்புவதை விட்டு, “ஃபீஸ் எவ்ளோ?” என்றாள்.
மாசம் மூவாயிரம்”.
நாலு பேருக்குமா?”
அவர் அதிர்ந்துப்போய்இல்ல மேடம்! ஒருத்தருக்கு
ஐயோ, ரொம்ப அதிகம் சார், எங்க பட்ஜெட்டுக்கு சரியா வராது!’
அம்மாவிடம் ஜெயிக்க முடியாது என்று அடுத்த அரைமணிநேரத்தில் அவருக்கு புரிந்துவிட்டது. அழாதகுறையாக, “சரி, எவ்வளவுனா ஒத்துப்பீங்க”.
எல்லாருக்கும் சேத்து மூவாயிரம்னா போனா போறது. உங்களுக்கு கம்மினு தோணினா வேண்டாம் பரவால்லஎன்றாள் அம்மா.
நீங்க ரொம்ப ஆர்வமா இருக்கறது பாத்தா எனக்கு மனசு கேக்கலே, சரி நாலாயிரம் வெச்சிக்கலாம்
யோசிச்சு சொல்றேன் சார். நீங்க கிளம்புங்க”.
கிளம்பிப்போனதும், மடை திறந்து விட்டாற்ப்போல் எல்லோரும் பேச ஆரம்பித்தோம்.
எனக்கென்னமோ அவ்ளோ திருப்தியா இல்லஎன்று அக்கா மெதுவாக ஆரம்பிக்க, எல்லோரும் சிரிக்க ஆரம்பித்தோம்.
கிஸோர் குமாராம்.. யிந்தியாம்
நான் சுருதிப்பெட்டியாம்
 'டொய்ய் டொய்ய்' என்று கர்மசிரத்தையாக இன்னும் கிடாரை தடவிக்கொண்டிருந்த தம்பியை அழைத்துவந்து, நடந்த கூத்து பற்றி நான் கூற, சிரிப்பு சத்தத்தில் அழைப்புமணி அடித்தது கொஞ்சநேரம் கேட்கவில்லை.
போய் பார்த்தால் மீண்டும் வாத்தியார். “புக் மறந்துட்டேன்”.
அம்மா சொன்னாள்யோசிச்சு பார்த்தேன். மூவாயிரம் கூட அதிகம் தான். எங்களுக்கு கிளாஸ் வேண்டாம்”.
அம்மா முகத்தில் தெரிந்த தீர்மானத்தை பார்த்து அவர், “அப்ப இன்னிக்கு கிளாசுக்கு ஆயிரம் ரூபாய் குடுங்கஎன்றார்.
என்னா சொல்லிக்குடுத்தீங்க? பசங்க அவங்களே பாடினாங்க”.
நான் டாக்சில வந்தேன். அதுக்காவது பணம் குடுங்க”.
நானா உங்களை டாக்சில வரச்சொன்னேன்? வேணும்னா பஸ்சார்ஜ் தரேன்”.
ஒண்ணும் வேணாம்என்று கோபமாக சென்று விட்டார்.
அடக்கி வைத்திருந்த சிரிப்பு வெடித்து கிளம்பியது. எல்லோரும் ஒரு சேர பேச துவங்க, “டாக்சில வந்தேன்னு கதை விட்றார். அவர் வந்தபோது மூச்சிரைத்துக்கொண்டிருந்தார்என்றான் தம்பி.

இனிமே அடையாறு டைம்ஸ்ல பாத்தேன் அப்பிடினு யாரோ அசடை கூப்பிடற வேலை எல்லாம் வெச்சிக்காதே. கடா வயசு ஆறது, பாட்டு க்ளாஸெல்லாம் தூக்கி பரணைல போடு போதும்.” என்று ப்ரஹ்மாஸ்த்திரத்தை விட்டு விட்டு சென்றாள் அம்மா.